வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். 'வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை' என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும் இச்சிறு நூலால் ஒருவாறு விளங்கும்.
பாரத நாட்டில் முருகன் வழிபாடு தொன்று தொட்டு நிகழ்ந்துவருகின்றது. முருகன் என்னும் சொல் இளமையும் அழகும் வாய்ந்த பெருமானைக் குறிக்கும். வேள் என்ற இனிய சொல்லையும் அதனோடு சேர்த்து முருகவேள் என்றும் வழங்குவதுண்டு. விரும்பத்தக்க பொருளை வேள் என்னும் சொல் உணர்த்துவதாகும். காதல் விளைக்கும் காமனைக் கருவேள் என்றும், கருணை விளைக்கும் முருகனைச் செவ்வேள் என்றும் பழந் தமிழ் நூல்கள் கூறும். சோழ வள நாட்டின் தலைநகராகிய பூம்புகார் நகரத்தில், முற்காலத்தில், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும் " ஏனைய கோயில்களும் அடுத்தடுத்து அமைந்திருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. இவ் வழகிய அடிகளில் முருகனை, "அறுமுகச் செவ்வேள்"