ஆசிரியர், இந்தப் புத்தகத்தில் அடங்கிய வியாசங்களைக் காரைக்குடியினின்றும் போதரும் 'குமரன்' எனப் பெயரிய வாரப் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தபோது, அவைகளுட் பலவற்றை அப்பத்திரிக்கைக்கு அனுப்பு முன்னரும், வேறு பலவற்றைப் பின்னரும் எனக்கு வாசித்துக் காட்டத் தெரிந்து இன்புற்றிருக்கின்றேன். அப்போது, அவ்வியாசங்களைப் புத்தக ரூபமாக வெளியிட்டால், 'குமரன்' வாசகருக்கே யன்றி அவரல்லா ரெல்லாருக்கும் அறிவும் ஆனந்தமும் அளிக்கும் பயப்பாடுடைத்தா யிருக்குமென்று கூறியிருந்தேன். ஆதலால், அவ்வியாசங்கள் இப்போது புத்தக உருவம் பெற்றமை யறிந்து மகிழ்வுறுகின்றே னென்பது சொல்லாமலே விளங்கும்.
இப்புத்தகத்தில் உள்ள எல்லா வியாசங்களும் இராவண ராச்சிய சம்பந்தமாகக் கல்வியிற் பெரிய கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர் கழறிய கருத்துக்களைக் கருப்பமாகக் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஆயினும், அவ்வியாசங்களுள் நேராக இராவண சம்பந்தமில்லாத கம்பராமாயணப் பகுதிகள் பலவற்றுள்ளும் திகழும் சிறந்த கருத்துக்கள் அனந்தம் சம யோசிதமாக இனிதெடுத்தாளப் பட்டிருக்கின்றன.
முகவுரை எழுதுவோர், நூலில் அடங்கியவைகளை