தேவார அறிவு தமிழ் மக்களிடத்தில் வளராமல் இருப்பது வியப்பன்று. வரவரக் குறைந்து போகுமாயின் அதுவும் வியப்பாகாது. பண்ணோடு முறையாகத் தேவாரத்தைப் பாடுவது கூட இப்போது அருகி வருகின்றது. பழைய மரபு என்றால் வேப்பங் காயாக எண்ணும் சிலர், தேவாரம் பாடும் புண்ணியச் செயலை உடையவராக இருந்தும், அப்பாடல்களுக்குரிய பண்ணை மாற்றிச் சினிமாமெட்டில் பாடுவதற்கும் துணிந்து விட்டார்கள். வேதமாக எண்ணிப் பக்தியுடன் பாடுவதற்குரியது தேவாரம்.
வேதத்துக்குச் சுரம் அமைந்தது போலத் தேவாரத்துக்குப் பண்கள் அமைந்திருக்கின்றன. திருமுறைகளைக் கண்டெடுத்த இராசராசன் அவற்றை அப்படியே வெளிப்படுத்தாமல், பண்களுடன் பாடுவது இன்றியமையாதது என்று அறிந்தே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய மரபிலுதித்த மங்கையொருத்தியின் உதவியினால் பண்களை அமைக்கச் செய்தான். தேவாரத் திருமுறைகளின் வகுப்பே பண்ணை அடிப்படையாகக் கொண்டது. இன்ன இன்ன பண்ணுக்கு இத்தனை பதிகங்கள் என்ற வரையறையை இந்த வகுப்பில் காணலாம். அப்படியிருக்கப் பண்களை மாற்றி ஓதுவதும், சினிமாப் பாட்டாக எண்ணும்படி ராகம் அமைத்து ஓதுவதும் தேவாரத்துக்குரிய தெய்விĨ