உலகம் இப்பொழுது எந்நிலையில் இருக்கிறது? அதைச் சொல்லலும் வேண்டுமோ உலகம் இயற்கைச் சன்மார்க்கத்தினின்றும் வழுவிச் செயற்கைத் துன்மார்க்கத்தில் வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவ்வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்னை? மக்கள் அறியாமையால் அரசியலுக்கும், புரோகிதத்துக்கும் அடிமைப்பட்டு இரையாகி வருவதைச் சிறந்த காரணமாகக் குறிக்கலாம்.
ஆங்காங்குள்ள அரசியல் வாதிகள், பேர், புகழ், தன்னலம் முதலியவற்றைக் குறிக்கொண்டு, குடியாட்சி என்றும் - கோனாட்சி என்றும் - குடிக்கோனாட்சி என்றும் - பலதிற அரசுகளை வகுத்து, மக்களை மயக்கி, ஒரு பக்கம் வஞ்சித்து வருகிறார்கள்; மற்றொரு பக்கம் புரோகிதர்கள் நின்று, பலதிறக் கண்மூடி வழக்க ஒழுக்கங்களை நாளுக்கு நாள் பெருக்கி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். இவ்விரு வழியிலும் மன்பதை நெருக்குண்டு துன்புறுகிறது. வஞ்சனைகள் பெருகப் பெருக, உலகம் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி வீழ்தல் இயல்பன்றோ?
துன்மார்க்க வீழ்ச்சிக்கு அழிவுவேலை ஒருபாலும், சன்மார்க்க எழுச்சிக்கு ஆக்கவேலை மற்றொருபாலும் நடந்து வருதல் வேண்டும். அழிவும் ஆக்கமும் சேர்ந்த ஒன்றே சீர