உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு.
எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால் - மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன, வாரிதியின் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா எனவரூஉந் தாயுமானார் திருவாக்கின்படி சமரச உணர்வு பெற்று வாழ்வது; மற்றொருவிதம் சமரசத்துக்கு மாறுபட்டு வாழ்வது; இவ்விரண்டையும் உலகில் காண்கிறோம். பின்னையதன் வளர்ச்சியே முன்னையதன் முடிவு என்பது எனது கொள்கை, கேணி, குளம், ஏரி, ஆறு, கடல் என்பன பெயரளவில் வேறுபட்டு நிற்பினும், அவைகளின் பொருளடக்கம் புனல் என்பதொன்றேயன்றோ?
சைவம், பல சமயங்களாகவும் முடிவில் தனித்த ஒரு பெருஞ் சமயமாகவும் நிற்றலால், அதன்கண் சமரசமுடைமை அறிஞர்க்குப் புலனாகாமற் போகாது, சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள், ஆகார புவனத்தில், பல சமயங்களைக் குறிப்பிட்டு இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி என்று வைதிக சைவத்தைப் போற்றியிருத்தல் காண்க. இச்சமரச உண்ம