நாயன்மார் என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட சுதேசமித்திரன் அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை.
இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப் பட்டன; நூலுக்கு நாயன்மார் திறம் என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது.
நூற்கண் சாதிப் பகைமை யின்மை, அன்பு சமய மாண்பு, தொண்டின் சிறப்பு, நாயன்மார் கொண்ட உண்மை உறுதி அஞ்சாமை ஒழுக்கம் வீரம் முதலியன, மக்கட்கு இன்றியமை யாத வேறு பல செம்பொருள்கள் சுருங்க ஓதப்பட்டுள்ளன. திருத்தொண்டத் தொகையும் இதனோடு சேர்க்கப்பட்டிருக் கிறது.
தொண்டினிடத்து ஆர்வமுடையார்க்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த கடவுள் அடியவர் இருவிதப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஒன்று நாயன்மார் என்பது; மற்றொன்று ஆழ்வார் என்பது. முன்னையது சிவனடியவர்க்கும், பின்னையது திருமாலடியவர்க்கும் வழங்கப்படுகின்றன.
ஆண்டவன் அடிக்கு அன்பு செலுத்தித் தலைமைப் பேறெய்தினவர் நாயன்மார