இந்நூல் தந்நலங் கருதாத் தனிப்பெரு வள்ளல்களாய்த் தமிழ் நாட்டிற் பெருமையுற்று விளங்கிய பாரி, ஆய், அதியன், குமணன் என்போரது வரலாற்றைக் கூறுவது. இது புறநானூற்றைப் பெரும்பான்மை தழுவியும், அகநானூறு நற்றிணை முதலிய பிற இலக்கியங்களைச் சிறுபான்மை தழுவியும் ஆராய்ந்து எழுதப் பெற்றதாகும். இதில், பண்டைத் தமிழ் வேந்தர், வள்ளல்கள், குடிகள், பரிசிலர், புலவர் என்போர்தம் நாகரிக வாழ்க்கையும் குணாதிசயங்களும், நிலப் பகுதிகளின் தோற்றம், இயற்கை வனப்பு இன்ன பிறவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல், இறுதியில் அருபதங்கட்குப் பொருள் பெற்றுள்ளது.
அமிழ்திற் சிறந்த தமிழ் மொழியதனை வளர்த்தவர் சேர சோழ பாண்டியரென்னும் முடியுடை மூவேந்தரன்றி, வேளிர் என்ற ஒரு வகுப்பாருமிருந்தனர். வேளிரைத் தென்னாட்டு மூவேந்தர் பெரிதும் ஆதரித்தனர். வேளிர் மகளிரையும் மூவேந்தர் மணம் புரிந்து கொண்டனர்.
இவ்வாறு ஆட்சி புரிந்த வேளிர் வரையாது வழங்கும் வள்ளன்மையாலும், அரசரால் பெற்ற வரிசைகளாலும், தண்ணளியாலும், வலிமையாலும், பண்டு தொட்டே நம் தமிழ் நாட்டில் பெரும்புகழ் பெற்று விளங்கினர். இவர்களைப் பாடாத புலவர் இலர் எ