இன்றுடன் ஒரு வருஷம் ஆகப்போகிறது. சுந்தரப்பையர் தம்முடைய பாந்தவ்யத்தை ஒட்டி இன்று ஏதேனும் சடங்குகள் செய்வார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில், என் ஆருயிர் நண்பன் கைலாசத்தின் வெகு விசித்திரமான வாழ்க்கையைப் பற்றி இதை எழுதி வெளியிடுவதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இன்பம் அளிக்காது. மனத்தத்துவ ஆராய்ச்சிக் காரர்களுக்கும் டாக்டர்களுக்கும் இது நல்ல அறிவு விருந்தாகும். உங்களுக்கு எப்படியோ? ஆனால் என் கடமையைச் செலுத்துவதில் உங்கள் விருப்பையோ வெறுப்பையோ நான் ஏன் லட்சியம் செய்யவேண்டும்?
கைலாசமும் நானும் சேர்ந்தாற்போல் பி.ஏ. பட்டம் பெற்றுக் கலாசாலையை விட்டு வெளியேறியவர்கள். அவன் அதிருஷ்டம் வெகு சீக்கிரமாகக் கோயம்புத்தூர்ப் பள்ளிக்கூடத்தில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. நான் ஊரிலேயே சௌக்கியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவன் ஊரை விட்டுப் போன ஒரு மாதம் வரையில் எனக்குக் கடிதங்கள் எழுதி வந்தான். பிறகு எங்களுக்குள் சுமார் ஆறு மாதம் வரையில் கடிதப் போக்குவரத்தே இல்லை.
ஒரு நாள் காலையில் பொழுது போக்குக்காகத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். தபால்காரன் ஒரு கவரைக் கொடுத்து