முருகனுடைய பெருமையைப் பாடிய கவிவாணர்கள் முற்காலத்திலும் பிற்காலத்திலும் பலர். திருமுருகாற்றுப் படையில் தொடங்கிய அவன் புகழ் வரவரப் பெருகி வளர்ந்து வருகிறது.
முருகனைப் பாடியவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம், தமிழ்ப்புலமை வாய்ந்தவர்கள், முருகன் அருளைப் பெற்றவர்கள் என்று. தமிழ்ப் புலமையும் அருட் பெருக்கும் ஒருங்கே உடையவர்கள் சிலர். அவர்களுள் மிகச் சிறந்தவர் அருணகிரிநாதர். முருகனுடைய அருளநுபவத்திலே ஊறினவர் அப் பெருமான் என்பதை அவருடைய திருவாக்காகிய பாடல்கள் காட்டும். அநுபவ உறைப்பிலே தலைசிறந்தவர் அருணகிரிநாதர் என்பது மாத்திரம் அன்று. அளவினாலும் அவர் பாடியவை மிகுதியாக உள்ளன. அவர் பாடி யவை (1) திருப்புகழ், (2) கந்தர் அலங்காரம், (3) கந்தர் அந்தாதி, (4) திருவகுப்பு, (5) மயில் விருத்தம், (6) வேல் விருத்தம், (7) சேவல் விருத்தம், (8) கந்தர் அநுபூதி என்பவை.
இவற்றில் திருப்புகழ் வெள்ளம் போலப் பெருகி வந்தது, அருணகிரியார் வாக்கில். பதினாறாயீரம் திருப்புகழ்ச் சந்தப்பாக்களை அவர் பாடினார் என்று வேறு புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.