சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர்.
அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம் என்றெண்ணி அந்தச் சித்தர் புறப்பட்டார். வரும் வழியில் திருக்கேதாரம் முதலிய தலங்களை யெல்லாம் வழிபட்டுச் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே 'எவ்வுயிரும் உய்ய எழுத்தருளிய சேவடியாரைச், செவ்விய அன்புற வணங்கி'ச் சிலகாலம் அத்தலத்தில் தங்கியிருந்தார்.
பிறகு காவிரிக் கரையில் உள்ள தலங்களை ஒவ்வொன்றாகத் தரிசித்துக் கொண்டு திருவாவடுதுறைக்கு வந்து திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவ்விடத்திலே தங்கிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவருடைய சங்கற்பம் இல்லாமலே உண்டாயிற்று. அதைப் பெரிதாக எண்ணாமல் அவர் அவ்விடம் விட்டகன்றார்.
காவிரிக் கரையில் பசுக்கூட்டங்கள் இருப்பதை அந்த யோகியார் கண்டார். அருகில் உள்ள சாத்தனூர் என்