நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப் பயன்படுகின்றன? என்னும் இவைபோன்ற கேள்விகளுக்குத் தக்க விடையளிக்க வேண்டுமானால் நமது உடம்பின் இயற்கை யமைப்பையும் உடம்பிலுள்ள தாதுக்கள், கருவிகள் என்பவற்றின் தன்மையையும் தொழிலையும் கூறும் நூலினை நாம் கற்றுத் தெரிதல் வேண்டும். உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் (Anatomy) உடற்கூற்று நூலெனப் படும். அவற்றின் செயலைப்பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.
நம்முடைய உடலானது எலும்பு, தசை, நரம்பு முதலிய தாதுக்களாலாயது. எலும்புகளும் ஒன்றையொன்று சேர்க்கும் கூட்டுத்தசை களும் உடம்பின் பல பகுதிகளுக்கும் ஆதாரமாய் உடம்பின் அடிச் சட்டம் போன்றுள்ளன. நெஞ்சப்பை, மூச்சுப்பை, மூளை, ஈரல், சிறு நீர்க் காய் முதலிய உடற்கருவிகளின் அமைப்பு