கந்தர் அலங்காரம் விநாயகரை முதலிற் சொல்லி, மேலே நூற்றேழு பாடல்கள் சேர்ந்து, மொத்தம் நூற்றெட்டுப் பாடல்கள் கொண்டு விளங்குகிறது. நூற்றெட்டு என்பது அர்ச்சனைக்குரிய எண்; அஷ்டோத்தர சத நாம அர்ச்சனை என்று சொல்வார்கள்.
இந்தப் பாடல்களில் அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானுடைய திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள கோலத்தையும், அப்பெருமான் திருவிளையாடல்களையும், வீரச்செயல்களையும் சொல்கிறார். தாம் பெற்ற அநுபவத்தைப் பல வகையில் எடுத்துரைக்கிறார். மக்களுக்கு உபதேசம் செய்கிறார். உடம்பின் இழிவையும், பொருள் நிலையாமையையும், மாதர் மயலை அகற்ற வேண்டுவதையும் கூறுகிறார். பல இடங்களில் தாம் மாதர் மயலில் உழந்த தாகவும், வேறு பல குறைகளை உடையவராகவும் சொல்லிக் கொள்கிறார், அவற்றை அவருடைய குறைகளாக எண்ணக் கூடாது. பிற மக்களுடைய குற்றங்களைத் தம்மேல் ஏற்றிக் கொண்டு சொல்வது ஞானியர் இயல்பு. மாணிக்கவாசகர் முதலிய பெரியோர் திருவாக்கிலிருந்து இந்த உண்மையை உணரலாம். காரைக்காலம்மையார் அறுபத்து மூவரில் ஒருவர். அவர் ஒரு பாட்டில், "நினையா தொழிதிநன் னெஞ்சமே நந்தமக்கோர் தஞ்சமென்று, மனையாளை யும்மைந்த