திருமுறைகளை முதல் இராசராச சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள் அம்மன்னன் வேண்டுகோளின் படி வகுத்தார். அவர் வகுத்தவை பதினொன்று. பிறகு இரண்டாங் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். அதன் சிறப்பை அறிந்த பெருமக்கள் அதைப் பன்னிரண்டாந் திருமுறையாகச் சேர்த்துக் கொண்டார்கள். அன்று முதல் திருமுறைகள் பன்னிரண்டு என்ற வரையறை உண்டாயிற்று.
திருத்தொண்டத் தொகை பதினொரு திருப்பாடல்கள் அடக்கியது. சேக்கிழார் ஒவ்வொரு பாட்டிலும் வரும் திருத்தொண்டர்களின் கதைகளைத் தனியே ஒரு சருக்கமாக்கிப் பதினொரு சருக்கங்களை அமைத்தார். அவற்றிற்கு அவ்வத் திருப்பாட்டின் முதற் குறிப்பையே பெயராக வைத்தார். "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கும் பாட்டில் ஏழு அடியார்கள் வருகிறார்கள். அவர்கள் வரலாற்றைச் சொல்லும் பகுதிக்கு, 'தில்லைவாழந்தணர் சருக்கம்' என்று பெயர் வைத்தார். இப்படியே இலைமலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் முதலிய பெயர்கள் அமைந்தன. நூலின் தோற்றுவாயாக உள்ள திருமலைச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச