பண்டைத் தமிழகச் சான்றோரில் நரை திரை மூப்பு இன்றிப் பல்லாண்டு வாழ்ந்த நற்றமிழ்ப் பெரியார் பிசிராந்தையார். இவர் பாடிய பாடல்கள் தொகை நூல்களுள் அகநானூற்றில் ஒன்றும் (308), நற்றிணை யில் ஒன்றும் (91), புறநானூற்றுள் நான்கும் (67, 184, 191, 212) ஆக ஆறு பாடல்களே. இவர் பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர்; ஆந்தையார் என்பது இவர்குரிய இயற்பெயர். ஊர்ப் பெயருடன் சார்த்தியே இவர் தம் பெயரை வழங்குவர். 'இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே' (புறம்.67) எனப் பிசிராந்தையாரே அன்னச் சேவலுக்குத் தன் பெயரை மொழிகின்றார்.
பிசிராந்தையார் பாண்டிய சோழ மன்னர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெற்றவர்; பாண்டியன் அறிவுடை நம்பியின் அரசவைப் புலவர்; கோப்பெருஞ் சோழனின் ஆருயிர் நண்பர்.
கோப்பெருஞ் சோழனிடத்தும் பிசிராந்தையாரிடத்தும் பெருகிய நட்பு, ஒருவரைப் பற்றி ஒருவர் பிறர் வாயிலாகக் கேட்டு வளர்ந்த பெரு நட்பு. புலவர் பிசிராந்தையார் தம் பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது கோப்பெருஞ்சோழன் பெயரையே தமக்குப் பெயராகக் கூறுவாராம். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்க முற்பட்ட பொழுது, தன் நண்பர் பிசிராநĮ