"சகலாவல்லியே நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப் போக்க, நான் தந்திரமாக என் மதியை உபயோதித்ததால் வந்தது. அவன், இதனை 60 பொன் கொடுத்து வாங்கினான் என்று நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன், அவன் 600 பொன் கொடுத்துப் பெற்ற பொருள் அது என்பது எனக்குத் தெரியும் அழுதுகொண்டே கொடுத்தான், அதன் முன்புதான் நீ சிரித்துக்கொண்டே நிற்கிறாய், சிங்காரியாக. உன் உடை, உல்லாசம், மாளிகை, தோட்டம், வண்டி வாகனம், வேலையாள், இவற்றை வேதாந்தம் தேடித் தரவில்லை, மாயாஜாலப் பொருள்களல்ல மக்கள் மன்றத்திலே நீயும் உன் சகாக்களும் பேசினீர்களாமே, கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று; அந்தக் கொள்ளை இலாபம் கொடுத்த பொருட்குவியலிலே நீ இருக்கிறாய் ஏழைகளின் இரத்தத்தை நாங்கள் குடிக்கிறோம் என்று ஏசினீ