"குருகாம் வயிரமாம் கூறும் நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்"
என்று திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருத்தாண்டகத்தில் பாடுகிறார். கோள்கள் எல்லாவற்றையும் சிவபெருமானுடைய திருவுருவமாக அவர் கண்டார். மனித வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் காலக் கூறுகளுக்கும் நவக்கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. வான நூல், சோதிட நூல் ஆகியவை நவக்கிரகங்களின் வெவ்வேறு இயல்புகளை ஆராய்ந்து சொல்கின்றன.
புராணங்களிலும் மந்திர சாஸ்திரங்களிலும் கிரகங்களின் உருவங்கள், வரலாறுகள், வழிபாட்டு முறை முதலியவை விரிவாக இருக்கின்றன. இவை யாவும் நவக்கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சி பல திறத்தில் பல காலமாக அறிஞர்களிடையே நிகழ்ந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
நவக்கிரகங்களைப் பெரும்பாலான கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். வெள்ளியிலும் பொன்னிலும் திருவுருவம் எழுதிப் பூசிக்கிறார்கள். நவக்கிரக சாந்தி செய்கிறார்கள்.
நவக்கிரக உபாசனை வழிவழியே வந்து கொண்டிருக்கிறது. நவக்கிரகத்தின் திருவுருவங்களை வேறு வேறு விதமாகப் பலர் வெளியிட்டிருக்கிறார்கள். நல்ல முறையில் சாஸ்த