நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல. நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை; இலக்கியமாகப் படிப்பதற்கு மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம். இது தனிப்பட்ட என் பிரத்தியேக அபிப்பிராயம் என்று தான் வெகு நாள் எண்ணியிருந்தேன். பண்டைய கிரேக்க நாடகாசிரியர்களிலிருந்து இன்றைய யூஜின் ஓநீல், அநீல்ஸ் வரையில் எல்லோருமே படிப்பதற்காகத்தான் நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள்; சில சமயம் அவை நடிக்கவும் பட்டிருக்கின்றன என்பது தான் உண்மையென்பது சமீப காலத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது.
அறுபது வருஷங்களாகத் தமிழிலும் தான் நாடகச் சீர்திருத்தம் நடந்து வருகிறது. அது சரியானபடி பலன் தராததற்கு ஒரு காரணம்தான் எனக்குத் தெரிகிறது. சீர்திருத்தமெல்லாம் நாடக மேடையை ஆதாரமாக வைத்துத்தான் நடந்து வருகிறது. நாடக மேடைக்கு ஆதாரமான இலக்கியத்தை வைத்து நடந்து வரவில்லை என்பதுதான் விஷயம். நாடக இலக்கியம் மஹோந்நதமாக எழுந்துவிட்டால், நாடக மேடை தானாகச் சீரடைந்துவிடும். முதலில் நாடகம் எ