"நளினி அடீ நளினி எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?" என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா.
"ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே " என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு உள்ளே வந்தாள் நளினி.
நளினிக்கு வயசு பத்திருக்கும் - இரண்டு, மூன்று மாசங்கள் அதிகமாகவே இருக்கும். ரொம்பவும் சிவப்பில்லை; மாநிறம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், முகத்திலே ஒரு குறுகுறுப்பும், அசைவிலே ஒரு அழகும் இருந்தன. ஒரு காலத்தில் பச்சையாயும், நன்றாகவும் இருந்த பாவாடையைக் கட்டிக் கொண்டிருந்தாள். பாவாடை இரண்டொரு இடங்களில் கிழித்து தைக்கப்பட்டிருந்தது. கழுத்திலே ஒரு பவழமாலை. தலைமயிர் எண்ணெய் பட்டு எத்தனை நாள் இருக்குமோ ஆனால், அதை வாராமல் பின்னி வாழைநார் முடிந்திருந்தாள். நெற்றியிலே பொட்டில்லை. ஆனாலும் அதிலே ஒரு பளபளப்பு இருந்தது. கைகளிலோ கால்களிலோ ஒரு நகையும் இல்லை. கண்ணாடி வளையல் கூட அவள் கைகளை அலங்கரிக்கவில்லை. அவள் கண்கள் ஆழ்ந்தகன்று இருண்டு இருந்தன. சின்ன வாய். ஒவ்வொரு வார்த்தையைப் பேசு