வழக்கமான கோடைக்காலத்து நாட்களைப் போன்றதொரு நாள்தான் அன்றும். வேறு புதுமை ஒன்றும் இல்லை.
குமரன் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். அறை நடுவில், ஒரு கையில்லா நாற்காலியின் மீது முக்கால் நிர்வாணமாய், தலைமயிர் இடுப்பு வரையில் மயில் தோகையைப் போல் புரள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். விரிந்த வாதாங்கொட்டை போன்ற கண்கள்; மதுரையான் கோவில் அரிவாள் போன்ற புருவங்கள்; கிளிபோன்ற அழகு; ராணிபோன்ற கம்பீரம்; அபினிப்பூவைப்போன்ற லாகிரி உண்டாக்கும் தோற்றம்; வாழை போன்ற உடல் மினுக்கும் உருவம்- இவைதான் - சுசீலா, குமரன் மனைவி.
முக்கால் நிர்வாணம் என்றால் நம்பத்தகாததா யிருக்கலாம்; ஆனால் அது முற்றிலும் உண்மை. அவளை அவன் மணந்ததே நம்பத்தகாதது.
தான் மணமான பிறகு கூட அவளுடைய பெற்றோர்களே நம்பாமல் பிரமையடைந்தார்கள் என்றால் சொல்வானேன் மல்லிகை மொட்டில் சிறைபட்டுக் கிடக்கும் மணத்தை சூரிய கிரணமும் சந்திரனின் தீண்டலும் வலுவில் வந்து விடுவிப்பது போல குமரன் அவளை மணக்க ஏன் முன் வந்தான்? அவள் அழகா அழைத்தது, ஒரு ஊர்த் தேனீயை மற்றொரு ஊர் புஷ்பக்கடை வரையில் இழுத்துச் செல்லும் ரோஜாவின் மணம் போல்? அதுவாக இருக்க &