ஆங்கில நவீனங்களிலிருந்து அபேஸ் செய்யப்பட்ட கதை அல்ல இது. அமெரிக்க சினிமா, ஹிந்திப் படம் எதையாவது பார்த்த பின் உருவான மாரீசமும் அல்ல. மனிதன் எத்தகைய பேய்த்தனக் கொடூர அசுர வெறியனாக மாறமுடியும் என்பதை விலக்கும் 'இருளடைந்த பங்களா'முழுக்க முழுக்க சுத்த சுயம்புவான கற்பனை என்றும் நான் சொல்ல மாட்டேன். உலகத்தில் நடந்த விஷயம். ஐரோப்பாவில் ஒரு இடத்தில் நிகழ்ந்ததாக ஒரு பத்திரிகையில் சிறிய செய்தி ஒன்று படித்தேன். இருபது வரிச் செய்தியை வைத்து என் மனம் செய்துள்ள குறளி வித்தைதான் இந்நெடுங்கதை.
ஊரின் ஒரு கோடியிலிருந்த பெரிய பங்களாவில் நிரந்தரமாகக் குடியிருந்த இருளை விரட்டி விட்டுத் திடீரென்று ஒளி சிரிக்கத் தொடங்கியது ஊராரின் பேச்சுக்குரிய பொருளாயிற்று.
அந்தப் பெரிய வீட்டில் வசிக்க வந்தது யாராகயிருக்கும் என்ற கவலை எல்லோருக்கும் ஏற்பட்டது ஆச்சர்யமல்ல. பலரது கவனத்தையும் கவர்ந்த கட்டிடம் அது.
நகரமுமல்லாத பட்டிக்காடு மில்லாத ஒரு ஊர் அது. பெயர் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே ஏதோ ஒரு 'ரெண்டும் கெட்டான் புரம்' அங்கு தண்ணீர் ஓடாத பெரு நதி ஒன்று உண்டு. மணல் பரந்து கிடக்க