'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்றும், 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றும் கூறிய பாரதியார், சிலப்பதிகாரத்தைக் கூறும்போது, "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு" என உள்ளம் குளிர்ந்து பாடுகின்றார்.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியம் என்றாலும், இன்னும் எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடப் படிப்போர்தம் நெஞ்சையள்ளும் சீர்மையைச் சிலப்பதிகாரம் பெற்றிருக்கிறது.
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரித்தாகி, சேர சோழ பாண்டிய நாட்டினரைத் தொடர்புபடுத்தித் தமிழ் நாட்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்திக்காட்டும் முத்தமிழ்க் காப்பியமாக இது விளங்குகிறது.
தமிழின் தொன்மை, தமிழ் மக்களின் பண்பாடு, உயரிய வாழ்க்கை, செல்வ வளம், அரசியல், சமுதாயம், கலை, தொழில் முறைகள், வணிகம், வெளிநாட்டுத் தொடர்புகள் முதலிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தும் சீரியதோர் தமிழ்க் கருவூலமாகச் சிலப்பதிகாரம் இருந்து வருகிறது.
அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சிலம்புச் செல்வர