ஊர்வலம் புறப்பட்டுவிட்டது உலகம் அதுவரை கண்டறியாத அருமைமிகு ஊர்வலம் இதைவிடத் திரளான மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம் அதிகம் இருந்ததுண்டு மகிழ்ச்சி கொந்தளித்த ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. முடிதரித்த மன்னனை, "ஆண்டவனின் பிரதிநிதி" என்ற முறையில், பயபக்தியுடன் வரவேற்று, வழிபட, மக்கள் இருமருங்கும் கூடிநிற்க, அருளாளன் அளித்த அதிகாரம் நமக்கு அரணாக இருக்கிறது என்ற எண்ணம், பார்வையில் தெரிய, அடிபணிந்து கிடக்க, ஆணைகளை நிறைவேற்ற, கேட்டதைக் கொடுக்க, காத்துக் கிடக்கும் இந்தப் பெருங்கூட்டத்துக்கு, நாமன்றோ கண்கண்ட கடவுள் என்று எண்ணி இறும்பூதெய்திய நிலையில், மன்னர்கள் "பவனி" வந்ததுண்டு.
பிடிபட்ட நாட்டிலிருந்து காணிக்கையாகவும், சூறையாடி யும் கொண்டு வந்த பொருட்குவியலைச் சுமந்து கொண்டு, அடிமை நிலையைப் பெற்ற முன்னாள் வீரர்கள் அஞ்சி அஞ்சி நடந்துவர, களத்திலே கடும் போரிட்டு வெற்றிக்கு உழைத்த வீரர் குழாம், மகிழ்ச்சி உமிழும் விழிகளுடனும், குருதி தோய்ந்த வாளுடனும் கம்பீரமாக நடந்துவர, வாழ்க, வீரரே வாழ்க வெற்றி பெற்றளித்த எமது தீரரே வாழ்க ' என்று மக்கள் கூட்டம், வாழ்